Thursday, June 3, 2010

மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு

மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு - சில

மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்

சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு

மோகனமே உன்னைப்போல என்னையாரும் - என்

மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை

ஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல - எரி

அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை




கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்

கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்

பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்

பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்

விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்

வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்

பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்

பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்




விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளி

விந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்

சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒரு

தாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்

சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறு

சிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்

கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்

கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்




உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அது

உள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்

உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அது

உதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்

உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அது

உடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்

உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்

உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்




செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி

தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்

செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது

தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?

எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி

எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்

இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்

இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்




பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்

பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்

சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்

சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்

எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்

இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்

மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்

வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்




கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்

காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்

துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடி

தூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்

பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுக

பூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்

கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்

கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்




கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்

குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்

கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளி

குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்

மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணை

முட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி

ஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்

உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி




- வைரமுத்து (தொகுப்பு - தமிழுக்கு நிறம் உண்டு)

No comments:

Post a Comment